அரியலுார் மாவட்டம், வானதிராயன் பட்டினம், ராம் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (48). இவர், தனது குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். சாமி கும்பிட்ட பின்னர் அவர், கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள அய்யாளம்மன் படித்துறைக்குச் சென்று காவிரி ஆற்றில் குளித்துள்ளார். அவரது குடும்பத்தினர் படித்துறையில் உட்கார்ந்திருந்தனர்.
தண்ணீரில் நீந்தி அவர் குளித்துக்கொண்டிருந்தபோது, அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டது. குடும்பத்தினரின் கண் முன்னே அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அக்கம்பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முற்பட்டனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் போலீசார், உடலைக் கைப்பற்றினர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.