சேலத்தில், மூட்டைத் தூக்கும் தொழிலாளியை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், கிச்சிப்பாளையம் பஞ்சந்தாங்கி ஏரி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (38). இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 13 வயதில் ஒரு ஆண் குழந்தை, 6 மற்றும் 5 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கண்ணனுக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சித்ரா தன் கணவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கண்ணனால் தனது மூன்று குழந்தைகளையும் கவனிக்க முடியாத நிலையில், மாமியார் சரோஜா கவனித்து வந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை (டிச. 21) காலை, வீட்டின் அருகில் கண்ணன் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறை துணை ஆணையர் லாவண்யா, உதவி ஆணையர் அசோகன், காவல் ஆய்வாளர்கள் சீனிவாசன், கண்ணன் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தினர். கண்ணனை கல் மற்றும் ஓட்டு வில்லையால் தலையில் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
வேலைக்குச் சென்றுவிட்டு மது போதையில் வந்த கண்ணனிடம் வழிப்பறி செய்யும் நோக்கில் அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். அவர் இறந்துவிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நிகழ்விடத்தில் பதிவான தடயங்களை, தடய அறிவியல் துறையினர் பதிவு செய்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் ஆய்வாளர்கள் சீனிவாசன், கண்ணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். சடலம் கைப்பற்றப்பட்ட இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு சிறுவர்கள் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த சிறுவர்களையும் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.