man lost their life because he was not able to buy an expensive bike

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் - அபரஞ்சம் தம்பதியினர். இவர்களுக்கு மாதேஸ்வரன், ராகுல் மற்றும் கோகுல் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனான மாதேஸ்வரன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாதேஸ்வரன் தனது தாய் தந்தையிடம் தனக்கு விலை உயர்ந்த பைக்கை வாங்கி தரவேண்டும் என்று நீண்ட நாட்களாக வே கேட்டு வந்துள்ளார். அதற்கு அவரது தந்தை நடேசன், “சோளம் அறுவடை முடிந்த பிறகு நான் வாங்கி தருகிறேன் அதுவரை பொறுமையாக இரு..” என்று கூறியுள்ளார். ஆனாலும், விடாத மாதேஸ்வரன் தனக்கு பைக் வாங்கி தந்தே ஆக வேண்டும் என்று கடந்த இரண்டு நாட்களாக அடம்பிடித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பைக் வாங்கி தர கால தாமதம் ஆகுவதால் விரக்தி அடைந்த மாதேஸ்வரன், அவரது பெற்றோர்கள் காட்டிற்கு வேலைக்குச் சென்ற பிறகு தனது தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி தராததால் விரத்தியில் மாதேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து மாதேஸ்வரனின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி முயன்ற போது, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்டு உடலை காவல் துரையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.