Skip to main content

கள்ளக்குறிச்சி அருகே மின் வேலியில் சிக்கி வியாபாரி உயிரிழப்பு!!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
மின் வேலி

 

 

கள்ளக்குறிச்சி அருகே மின்சார வேலியில் சிக்கி வியாபாரி மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், பொறையூர் கிராமத்தை சேர்ந்த தனபால் (46) ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் அவரது ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைக்கும்போது ஒரு ஆடு மட்டும் காணாமல் போய்விட்டது. உடனே காணாமல் போன ஆட்டைத் தேடுவதற்காக சென்றுள்ளார். ஆனால் அதைத் தேடிச் சென்ற தனபாலூம் வீட்டுக்கு வரவில்லை.

 

அவரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தேடி சென்றனர். அப்போது அதே பகுதியில் உள்ள சிவலிங்கம் என்பவரின் விளைநிலத்தில் காட்டு விலங்குகளுக்கு போடப்பட்டுள்ள மின் சாரவேலியில் சிக்கி தனபால் இறந்து கிடந்துள்ளார்.

 

இதுகுறித்து வரஞ்சரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தனபால் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணி வரை தனபால் உடல் பிரேத பரிசோதனை செய்து தரப்படவில்லை என்று கோபமடைந்த தனபால் உறவினர்கள் சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்பியன்மாதேவி என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து எலவனாசூர்கோட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

வனவிலங்குகளுக்கு போடப்படும் மின்சார வேலியில் சிக்கி மனிதர்கள் இறப்பது தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகின்றன. உதாரணமாக சமீபத்தில் வேப்பூர் கள்ளக்குறிச்சி பகுதியில் இது போன்ற மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒருவர் திருடிவிட்டு தப்பி ஓடும்போது வேப்பூர் அருகே விளை நிலத்தில் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இறந்து கிடந்தார். மற்றொருவர் தன்னுடைய விவசாய நிலத்திலேயே நிலை தடுமாறி விழுந்து இறந்து போய் உள்ளார்.

 

இந்த சம்பவங்களை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் திருட்டுத்தனமாக சட்டத்திற்கு புறம்பாக விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.