Man arrested under pocso act near salem

Advertisment

சேலத்தில், பதினாறு வயது சிறுமியை இரண்டு ஆண்டாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தாயின் ஆண் நண்பரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராஷ்மிகா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோவையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்து எஸ்.எஸ்.எல்.சி படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் பகுதி நேர வேலைக்கும் சென்று வருகிறார். இந்நிலையில் சிறுமியை மே 1ம் தேதி, சேலத்திற்கு அழைத்து வந்த அவருடைய அத்தை, இனி தாயாருடன் தங்கியிருந்து படிக்கும்படி கூறியுள்ளார். இதற்கு ராஷ்மிகா, தான் தாயாருடன் ஒருபோதும் இருக்க மாட்டேன் என்றும், மீண்டும் கோவைக்கே அழைத்துச் செல்லும்படியும் கூறியுள்ளார்.

தாயாருடன் தங்கியிருக்க மறுத்தது குறித்து அந்தச் சிறுமியிடம் அத்தை விசாரித்தார். அப்போது அவர், தனது தந்தை எட்டு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின், தன் தாயாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளி பட்டறைத் தொழிலாளி ஒருவருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. தன் தாயாரை பார்க்க அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவார் என்றும், அப்போது தன்னையும் அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்றும், கடந்த இரண்டு ஆண்டாக இந்த கொடுமை நடந்து வந்ததாகவும் ராஷ்மிகா கூறியுள்ளார். பல முறை தாயாரின் கண் முன்னே இந்த கொடூரம் அரங்கேறியதாகவும் சிறுமி கதறி அழுதபடி கூறியிருக்கிறாள்.

Advertisment

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் அத்தை, சேலம் நகர அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் பழனியம்மாள், சிறுமியிடம் விசாரித்தார்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தாதகாப்பட்டியைச் சேர்ந்த மணிமாறன் (31) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரும், ராஷ்மிகாவின் தாயாருடன் உள்ள தவறான உறவு குறித்தும், சிறுமியை பாலியல் ரீதியாக கொடுமை செய்ததையும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அவருடைய கொடுமை தாங்க முடியாமல்தான் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சிறுமி, கோவையில் உள்ள அத்தை வீட்டுக்குச் சென்றிருக்கிறாள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, மணிமாறன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். அவரை நீதிமன்ற உத்தரவின்பேரில், சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்ட காவல்துறையினர், அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.