நாகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவமனை காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவமனையின் காவலாளி ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள இராதாமங்கலம் தெற்காலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நாகை அரசு மருத்துவமனையில் தற்காலிக காவலாளியாக பணியில் இருந்துவருகிறார். ராஜேந்திரன் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளரும் 9 வயது சிறுமி ஒருவரை, ராஜேந்திரன் வீட்டு வேலைக்கு பயன்படுத்திவந்துள்ளார். தினமும் வீட்டிற்கு வரும் அந்தச் சிறுமியிடம் ராஜேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனைக்கண்ட அந்த ஏரியாவாசிகள் சைல்டு லைன் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தனர், அதன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பின்னர் காவல் துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். காவல் நிலையத்தில் உள்ள குழந்தைகள் விளையாட்டு அறையில் சிறுமியிடம் விசாரனை நடத்தினர். விசாரணையில் ராஜேந்திரன் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பதை விசாரனை மூலம் அறிந்த காவல்துறையினர் ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நீதிமன்றம் தாமே முன்வந்து சிறுமிகள் பாலியல் வழக்குகளை எடுத்து விசாரித்து வருகிறது. அதேபோல், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் சிறுமிகளுக்கு நடக்கும் அநீதிகள் குறைந்தபாடில்லை என்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்..