Skip to main content

காதல் ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்த ஆசாமி மீது மேலும் ஒரு இளம்பெண் புகார்! 

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

Man arrested in salem who got money from couples

 

காதல் ஜோடிகளைக் குறி வைத்து மிரட்டி பணம், நகைகளைப் பறித்த ஆசாமி மீது மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரவும் காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

 

சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பட்டர்ஃபிளை மேம்பாலம் அருகே காதலனுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், காதலனுடன் இளம்பெண் நெருக்கமாக நின்று பேசிக்கொண்டு இருப்பதை அலைபேசியில் பதிவு செய்துள்ளார். பின், காதலனை மிரட்டி அங்கிருந்து விரட்டி விட்ட மர்ம நபர், அந்தப் பெண்ணிடம், காதல் விவகாரத்தை பெற்றோரிடம் சொல்லி விடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.  இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், நடந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். 

 

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சேலம் அல்லிக்குட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் சரவணன் (45) என்பவர்தான் சம்பவத்தன்று இளம்பெண்ணிடம் நகை, பணத்தை மிரட்டிப் பறித்துச் சென்றார் என்பது தெரியவந்தது. அவருடைய அலைபேசி பதிவுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் காதலர்களுடன் இருக்கும் படங்கள், காணொளி பதிவுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

 

அவரிடம் விசாரணை நடத்தியதில், காதலில் ஈடுபடும் இளம்பெண்களை குறி வைத்து அவர்களை பின்தொடர்வதும், அவர்களின் அலைபேசி எண், புகைப்படங்கள் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து வைத்துக்கொண்டு மிரட்டிப் பணம் பறிப்பதையே வேலையாக வைத்திருந்தது தெரியவந்தது. சரவணன் மீது இரும்பாலை காவல்நிலையத்திலும் இதேபோல் ஒரு புகார் பதிவாகி உள்ளது. இதையடுத்து அவரை கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். 


அதேசமயம், இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் இருந்தால் அவர்கள், சேலம் மாநகர காவல்துறையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும், அவர்களுடைய பெயர், இதர விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை அறிவித்து இருந்தது. இதற்காக கொண்டலாம்பட்டி சரக உதவி ஆணையர் ஆனந்தி 9159222580, சேலம் மாநகர சமூக ஊடகப்பிரிவு உதவி ஆய்வாளர் கீதா 9498178630 ஆகியோரின் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இதுகுறித்து விசாரிக்க துணை ஆணையர் லாவண்யா தலைமையில் உதவி ஆணையர்கள் அசோகன், ஆனந்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து ஆணையர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார். 

 

இது ஒருபுறம் இருக்க, ஜன. 5ம் தேதி தாதகாப்பட்டி எஸ்.வி.ஆர் நகரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி அன்னதானப்பட்டி தனியார் திருமண மண்டபம் அருகே வரவழைத்து கத்தியைக் காட்டி மிரட்டி ஒன்றரை பவுன் நகையை சரவணன் பறித்துச் சென்றார் எனத் தெரிவித்துள்ளார். அதன்பேரில், உதவி ஆய்வாளர் அயூப்கான் விசாரணை நடத்தி, சரவணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். மாநகரில் சரவணன் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், நான்கு பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார்கள் குறித்து உதவி ஆணையர்கள் ஆனந்தி, அசோகன் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.