Skip to main content

மனைவிக்கு தொல்லை கொடுத்த தம்பியை கொலை செய்த அண்ணன்

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

man arrested near viluppuram in woman case

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் கிராமப் பகுதி, தெரசா நகரில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மகன் வீரமுத்து(30). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் வேலை நிமித்தம் காரணமாக வாரத்தில் சில நாட்கள் வெளியூர்களுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். 

 

அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு பணி காரணமாக சென்னை சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு காத்திருந்த வீரமுத்துவின் அண்ணன் மாரிமுத்து (34) அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அதில், உடல் எல்லாம் காயம் ஏற்பட்டு வலியில் துடித்து சத்தமிட்டுள்ளார். சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்து பார்த்தபோது வீரமுத்துவின் கை, தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டிருந்தது. கணவரின் உடலெல்லாம் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்திருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வீரமுத்து கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள் வீரமுத்து வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து செஞ்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர். டி.எஸ்.பி. கவினா மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். 

 

விசாரணையில் வீரமுத்துவின் அண்ணன் மாரிமுத்து தம்பியை கொலை செய்தது தெரியவந்தது. அதன்பிறகு மாரிமுத்துவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மாரிமுத்து, “வீரமுத்து என் மனைவியை ஒருதலையாக காதலித்தார். தனது ஆசைக்கு இணங்குமாறு தொந்தரவு கொடுத்து வந்தார். இதற்கு என் மனைவி மறுப்பு தெரிவித்ததால் அவரை வீரமுத்து பல வழிகளில் தொந்தரவு செய்து வந்தார். இதனை என் மனைவி என்னிடம் கூறினார். அதன் பிறகு வீரமுத்துவை பலமுறை எச்சரித்தேன். அதையும் மீறி வீரமுத்து எனது மனைவிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததை அறிந்து ஆத்திரமடைந்து வீரமுத்துவை வழிமறித்து கத்தியால் தலை, கை, கால் ,மார்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டினேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்த போலீஸ் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட வீரமுத்துவின் மனைவியும் மாரிமுத்துவின் மனைவியும் உடன் பிறந்த சகோதரிகள். மேலும் வீரமுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து அந்தப் பெண் கர்ப்பமாகி உள்ளார். அந்த பெண்ணை அவர் ஏமாற்றியதாக செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், வீரமுத்து ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்திருக்கிறார். தற்போது சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவந்தவர், தனது அண்ணன் மனைவியிடமே தவறான முறையில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால், சொந்த அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்