Skip to main content

மதுபோதையில் நண்பரை குத்திக்கொன்ற வாலிபர் கைது

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

Man arrested for misbehaved with friend while intoxicated

 

நாமக்கல் அருகே, மது போதை தலைக்கேறிய நிலையில், நெருங்கிய நண்பரைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள பருத்திப்பள்ளியைச் சேர்ந்தவர் உமாசங்கர் (27). இவருடைய மனைவி சிவாம்பிகா. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (23). இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

 

உமாசங்கரும், சுரேஷூம் சிறு வயது முதலே நெருக்கமான நண்பர்கள். இந்நிலையில், ஜன. 18ம் தேதி தைப்பூசப் பண்டிகை இரவு, அப்பகுதியில் உள்ள முருகன் கோயிலில் உமாசங்கர், சுரேஷ் ஆகியோரின் குடும்பத்தினர் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்கள் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். ஒருவரை ஒருவர் கேலி பேசிக்கொண்டும், ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டும் இருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

 

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், தான் கையில் வைத்திருந்த கத்தியால் உமாசங்கரை சரமாரியாகக் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உறவினர்கள் உமாசங்கரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உமாசங்கரின் மனைவி சிவாம்பிகா, எலச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுரேஷைக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.