Skip to main content

நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு... கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

Malpractice in the provision of jewelry; Co-operative union secretary fired

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டுவருகிறது. இந்தச் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செக்காரப்பட்டியில் கடன் சேவை மையம் இயங்கிவருகிறது. 

 

இந்த மையத்தில் தர்மபுரி மாவட்டம், பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பெயரில் 187 பவுன் நகைகள் அடமானம் வைத்து 41 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருப்பது சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து செக்காரப்பட்டி கடன் சேவை மையத்தின் கணக்காளர் கார்த்திகேயன் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். 

 

இதையடுத்து அந்த சங்கத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட நகை அடமானக் கடன்களை ஆய்வு செய்ததில், காடையாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 2 பேருக்கு விதிகளை மீறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டது தெரியவந்தது. கூட்டுறவு சங்க விதிகளுக்குப் புறம்பாக நகைக்கடன் வழங்கியதாக சங்கச் செயலாளர் மணிராஜை பணியிடை நீக்கம் செய்து, சங்கத் தலைவர் சுந்தரராஜன் உத்தரவிட்டார். 

 

இது ஒருபுறம் இருக்க, செயில் ரீப்ராக்டரி நிறுவன பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திலும் ஒருவருக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த சங்கத்தில் நகைக்கடன் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

 

இதுபற்றி கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கூட்டுறவு சங்கங்களில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் வழங்கக்கூடாது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியின்போது நகைக்கடன்கள் வழங்கியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சில சங்கங்களில் போலி நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து முழுமையான விசாரணை நடந்துவருகிறது'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டுறவு உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Attention Applicants for Cooperative Assistant Exam

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி (10.11.2023) அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கான எழுத்துத் தேர்வு வரும் 24 ஆம் தேதி (24.12.2023) கொளத்தூர் தொன் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, அண்ணா நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, நந்தனம் அரசினர் கலைக் கல்லூரி, சேத்துப்பட்டு பச்சையப்பா கல்லூரி ஆகிய 6 மையங்களில் நடத்தப்படவுள்ளது.

இத்தேர்விற்கான அனுமதி நுழைவுச் சீட்டினை (Hall Ticket) நேற்று (18.12.2023) முதல் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் https://www.drbchn.In என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு chennaidrb@gmail.com மின்னஞ்சல் முகவரியையும், 044-2461 6503 மற்றும் 044-2461 4289 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனச் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Diwali bonus announcement for co-operative society workers

 

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

 

தமிழக கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2023-2024-இல் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

 

போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு 3 அயிரம் ரூபாயும், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு 2 ஆயிரத்து நானூறு ரூபாயும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44 ஆயிரத்து 270 பணியாளர்களுக்கு  28 கோடியே ஒரு இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.