கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலூர் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் கடந்த 2021 - 2022, 2022 - 2023 ஆகிய நிதியாண்டில் 100 நாள் வேலையில் பல முறைகேடுகள் நடைபெற்றதாகப் பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வருபவர்கள் மற்றும் இறந்து போனவர்கள் பெயர்களில் பணி செய்ததாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு அவர்கள் பெயரில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த முறைகேட்டில் சுமார் 4 லட்சம் ரூபாய் கையாடல் நடந்திருப்பதாக அதிகாரிகள் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து அந்த கிராம பொதுமக்கள், “தங்கள் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பினோம். அந்தப் புகாரின் மீது அதிகாரிகள் ஆய்வு செய்து முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கையாடல் செய்த பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ரெக்கவரி செய்ய வேண்டும்” என்று கூறுகின்றனர்.