Skip to main content

தமிழ் சமுதாயம் வெற்றி பெற... மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் பேச்சு...

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
Seri M. Saravanan



திருப்பூர் வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய தமிழாற்றுப்படை நிகழ்ச்சி ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்றது. மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன், கனிமொழி எம்.பி., ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.  
 

நிகழ்ச்சியில் பேசிய மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன்,
 

இது சாதாரண ஒரு மேடை அல்ல. தன் வாழ்நாளில் ஒரு கவிஞன், தனக்கு முன்னால் வாழ்ந்த பெருமக்களுக்கும், தன்னுடைய சமகால கவிஞர்களுக்கும் தமிழாற்றுப்படை நடத்துகின்ற உலகத்தில் முதல் நிகழ்ச்சி இந்த தமிழாற்றுப்படைதான். இருக்கின்ற தலைமுறைக்கும், இனி பிறக்கின்ற தலைமுறைக்கும் ஆற்றப்படுகின்ற ஒரு ஒப்பற்ற தமிழாற்றுப்படை இதுமட்டுமாகத்தான் இருக்க முடியும். 
 

ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் இந்த தலைமுறை வாழ்ந்து கொண்டிருக்கிறது. நிகழ்கால தேவைகளையும், எதிர்கால சவால்களையும் உணர்ந்து செயல்படாத எந்த தலைவனும் வெற்றிப்பெற முடியாது. நிகழ்கால தேவைகள் தெரிந்திருக்க வேண்டும். எதிர்கால சவால்களை புரிந்திருக்க வேண்டும். இது இரண்டும் இருந்தால்தான் இந்த தமிழ் சமுதாயம் வெற்றி பெற முடியும். 
 

மஞ்சள் பூசி குளித்த பெண்களை பார்க்கின்ற கடைசி தலைமுறை இது. மயிலிறகு குட்டிப்போடுமென்று புத்தகத்திலே வைத்துவிட்டு ஒவ்வொரு காலையும் அதனை திறந்து பார்த்த கடைசி தலைமுறை வாழ்கின்ற காலம் இது. நவராத்திரி அன்று முதல்நாள் முளைப்பாறியில் வைத்த நவதானியத்தை ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை அன்று பறித்துச் சென்று புத்தகத்திலே வைத்துவிட்டு சரஸ்வதி கல்வி கொடுப்பாள் என்று நம்பிக்கொண்டிருந்த கடைசி தலைமுறை இது. மரணச் செய்தியை தந்தியிலே கேட்ட தலைமுறை இது. காதல் கடிதம் எழுதி காதலித்த கடைசி தலைமுறை இது. இந்த தலைமுறைக்கு சரியான செய்திகள் சொல்ல வேண்டும். இது இன்றைய தேவைகள்.
 

எதிர்கால சவால்கள், இன்னும் ஐம்பது ஆண்டுகளில் 70 சதவீதம் விளைநிலங்கள் நகர்புறங்களாக மாறும். தொழில்நுட்பத்தில் 70 சதவீதம் மறைந்துபோய் அதில் மேம்பாடு அடைந்து புதிய தொழில்நுட்பத்தில் வாழக்கூடிய ஒரு தலைமுறை உருவாகும். உலகின் தட்பவெட்ப நிலை மாறி இன்றைக்கு சூர்ய கதிர்களால் ஆட்கொள்ளப்பட்டு எத்தனையோ பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் 50 ஆண்டுகளில் தட்பவெட்ப நிலை மாறி மிகப்பெரிய சவால்களை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கும். இன்னும் 50 ஆண்டுகளில் இயற்கை வளங்கள் குறையும். 
 

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற நிலைமை போய், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலைமை வந்து, நானொரு குழந்தை நீயொரு குழந்தை, ஒருவர் மடியிலே ஒருவரடி என்று பாடி குழந்தைகளே இல்லாமல் வாழுகின்ற நிலைக்கு போய்க்கொண்டிருக்கின்ற காலக்கட்டத்தில் இன்னும் 50 ஆண்டுகளில் வயோதிக சமுதாயம் அதிகம் இருக்கின்ற தலைமுறையாக நாம் இருப்போம். இவைகளையெல்லாம் தாண்டி இன்னும் 50 ஆண்டுகளில் கலாச்சார சீரழிவுக்கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கியவர்களாக நாம் இருப்போம். 
 

இப்போது இருக்கின்ற நமது நடவடிக்கை, எதிர்கால தேவைகளையும் எதிர்கால சவால்களையும் மையமாக கொண்டால்தான் இந்த சமுதாயம் வெற்றியடையும். ஆகவே இதனை மையமாகக்கொண்டுதான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மிகப்பெரிய தமிழாற்றுப்படையை அடுத்த தலைமுறைக்கு தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார். 
 

அடுத்த தலைமுறை இந்த தமிழாற்றப்படையை படிக்கும்போது, தமிழுக்கு இத்தனை பெருமக்கள் சிறப்பு செய்திருக்கிறார்கள் என்பதை உணரக்கூடிய நிலை ஏற்படும். நமக்கு கிடைத்த மிகப்பெரிய தலைவர்கள் இரண்டு பேர். ஒருவன் வள்ளுவன். திருவள்ளுவருடைய அதிகாரங்களில் மூன்றில் ஒரு பங்கு அமலுக்கு வந்திருந்தாலே உலகத்தினுடைய அதிகாரங்கள் நம்முடைய கைகளில் வந்திருக்கும். ஆனால் திருவள்ளுவர் எம்எல்ஏவாகவோ அல்லது மந்திரியாகவோ ஆக முடியாத காரணத்தினால் அவருடைய கருத்துக்கள் அமலுக்கு வராமலே போனது. 
 

அதற்கு அடுத்து நமக்கு கிடைத்த மிகப்பெரிய தலைவன் பாரதி. சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்னார். பாரதி மட்டும் அமைச்சராக இருந்திருந்தால் சிங்கள தீவுக்கு பாலம் கிடைத்திருக்கும். இவர்களுக்கு அடுத்து இந்த சமுதாயத்திற்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய சொத்து கவிப்பேரரசு வைரமுத்து. ஆனால் நம்முடைய துரதிர்ஷ்டம் எந்த நல்ல கவிஞனையும் நாம் தலைவனாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இயல், இசை, நாடகம் என்று பேசிக்கொண்டருந்த தமிழருடைய உள்ளத்தில், நான்காவது தமிழாக அறிவியல் தமிழும் இருக்கின்றது என்று சொன்னவர் கவிப்பேரரசு வைரமுத்து. இன்று தமிழாற்றுப்படை ஆற்றிக்கொண்டிருக்கின்றார். கவிப்பேரரசு பற்றி ஒரு சில வரிகள் பகிர்ந்துகொண்டால்தான் பொருத்தமாக இருக்கும்.
 

என்னுடைய பள்ளிக்கூட காலங்களில் கவிப்பேரரசுவை காதலிக்க தொடங்கினேன். எனக்கு தேவைப்பட்ட மொழியை அவர் பேசியதால் புத்தகத்தை புரட்டினேன். காதலித்துப் பார் என்றார். 
 

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….

உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் என்றார்.
 

அதுதான் எனக்கும் வைரமுத்துக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு. கண்டதும் காதல். இப்படி எல்லா நிலைகளிலும் அவர் சொன்ன எல்லா வார்த்தைகளையும் பார்த்தீர்கள் என்றால் ஒரு புதிய சக்தியை கொடுக்கும். நான் வாழ்நாளில் நான் அடைந்திருக்கும் சிகரங்களுக்கெல்லாம் வைரமுத்து அவர்கள் கண்ணுக்கு தெரியாத துணையாக என்னோடு வந்திருக்கின்றார். நான் இதனை பல மேடைகளில் சொல்லியதுண்டு. 
 

கடல் கடந்து வந்த ஒரு தமிழன் சொல்கின்றேன். அறிவியல் தமிழை சொன்ன தமிழன் வைரமுத்து. என்னுடைய இருபது வயதில் வைரமுத்து சொல்கின்றார்.
 

இருபதுகளில்…

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு…

ஜன்னல்களை திறந்து வை..

படி.. எதையும் படி… வாத்சாயனம் கூடக் காமம் அல்ல-கல்விதான் படி…

உன் சட்டைப் பொத்தான் கடிகாரம் காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்..

சப்தங்கள் படி சூழ்ச்சிகள் அறி

பூமியில் நின்று வானத்தைப் பார் வானத்தில் நின்று பூமியைப் பார்…

உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி

காதலை சுகி காதலில் அழு..

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி

வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்….

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு…

உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்

உட்கார முடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்.. கைப்பற்று…

ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே…

எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி…

வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு…

நிலைகொள்.

நாற்பதுகளில்…

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்

செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி

எதிரிகளை ஒழி..

ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு

பொருள் சேர்

இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு

பகல் தூக்கம் போடு

கவனம்.. இன்னொருக் காதல் வரும்.. புன்னகை வரைப் போ புடவை தொடாதே..

இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு..

இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு…

ஐம்பதுகளில்…

வாழ்க்கை- வழுக்கை இரண்டையும் ரசி

கொழுப்பை குறை.. முட்டையின் வெண்கரு காய்கறி கீரைகொள்

கணக்குப்பார்

நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்….

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது.. இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்..

விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு..

மனிதர்கள் போதும்

முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு

மனைவிக்குப் பேன்பார்

பழைய டைரி எடு.. இப்போதாவது உண்மை எழுது..

எழுபதுகளில்…

இந்தியாவில் இது உபரி..

சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ

ஜன கண மன..!!!
 

நான் இன்னும் ஐம்பதை தாண்டி போகவில்லை. ஆக இப்படி எல்லா நிலைகளிலும் என்னோடு துணை நின்று கண்ணுக்கு தெரியாத வழிகாட்டியாக, ஒரு கண்ணுக்கு தெரியாத தலைவனாக, ஒரு மானசீட குருவாக எல்லா நிலைகளிலும் நிற்கின்றார் என்றால் அது வைரமுத்து அவர்கள். ஏன் இதனை நான் இங்கே சொல்கிறேன் என்றால், இங்கு பாடுபொருள் கவிக்கோ அவர்கள். அந்த பாடுபொருளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றால், அதனை பாடுகின்றவர் உயர்ந்த நிலையிலே இருக்க வேண்டும்.  எல்லா தமிழையும் நமக்கு கொடுத்த அற்புதமான வைரமுத்து ஆற்றுகின்ற தமிழாற்றுப்படை இருக்கின்ற தலைமுறைக்கல்ல, இனி பிறக்கின்ற தலைமுறைக்கும் ஒரு அற்புத பதிவாக இருக்கும். அதனை ஒவ்வொரு தமிழனும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பேசினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Next Story

பொன்முடி விவகாரம்; ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வருக்கு பரபரப்பு கடிதம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் (14.03.2024) பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார்.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த 14 ஆம் தேதி (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.