Skip to main content

தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

makkalo needhi maiam chennai high court


தமிழகத்தில், ‘பேட்டரி டார்ச் லைட்' சின்னம் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, அச்சின்னத்தை ஒதுக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கை, மக்கள் நீதி மய்யம் கட்சி திரும்பப் பெற்றது. 

 

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 'பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வர இருக்கும் தேர்தலில், புதுச்சேரியில் மட்டும் 'பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, அக்கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச் செயலாளரான, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

makkalo needhi maiam chennai high court


இதற்கிடையில், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், அச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி அக்கட்சியின் சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டதால், மக்கள் நீதி மய்யத்துக்கு 'டார்ச் லைட்' சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டது.

 

இந்நிலையில், சின்னம் ஒதுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'டார்ச் லைட்' சின்னம் கிடைத்துவிட்டதால் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

 

இதை ஏற்று, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்