Skip to main content

‘பணி நிரந்தரம் செய்க...!’  - மினி கிளினிக் மருத்துவர்கள் கோரிக்கை

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

‘Make the job permanent ...!’ - Mini Clinic Physicians Request

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக கொடுத்தனர். ஈரோடு அரசு மினி கிளினிக்கில் பணியாற்றும் மருத்துவர்கள் சிலர் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

 

பிறகு அவர்கள் கூறும்போது, “கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போது அரசு சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முக்கியமாக மருத்துவ சேவைகள் தேவைப்பட்ட நிலையில் சென்ற அ.தி.மு.க. ஆட்சியில், மருத்துவர்கள் பணி நியமனம் ஒப்பந்த அடிப்படையிலும் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் நடைபெற்றன. 

 

ஆனால், அரசு மினி கிளினிக் மருத்துவர்களாகிய நாங்கள் நீதிமன்ற வழிகாட்டுதல்படி தமிழக அரசின் ஆணைக்கு இணங்க ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் துணை இயக்குநர் (சுகாதாரம்), மாவட்ட இணை இயக்குனர் மூலமாக நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டோம். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களில் 70 சதவீதம் பேர் கரோனா முதல் அலையின் போது தடுப்பு பணியில் சிறப்பு மருத்துவராக 6 மாதம் முதல் 9 மாதம் வரை பணியாற்றி உள்ளோம். அதன்பின் மினி கிளினிக்கில் இரண்டு மாதங்கள் பணியாற்றினோம் எங்களில் பலர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களிலும் பணியாற்றினோம். 

 

தற்போது ஆறு மாத காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு, கரோனா கவனிப்பு மையம், தடுப்பூசி முகாம், காய்ச்சல் கணக்கெடுப்பு, கரோனா கட்டுப்பாட்டு அறை உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகிறோம். மேலும் தற்போது டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இந்த கரோனா பேரிடர் காலத்தில் மருத்துவராகிய நாங்கள் தமிழக அரசுடன் இணைந்து இரவு பகல் பாராமல் குடும்ப உறுப்பினர்களையும் பாராமல் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வந்துள்ளோம். எங்களில் பலர் கரோனா பாதிப்பு ஏற்பட்டு மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளோம். இந்த சேவையை நாங்கள் முழு மனதோடு செய்துவருகிறோம். ஆகவே, எங்களைப் போன்ற ஒப்பந்த முறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களை காலிப்பணியிடங்களில் நிரப்பி தமிழக அரசு பணி நிரந்தரம் செய்து தர வேண்டும்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.