Skip to main content

மஜகவின் 3ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சமூக நீதி பொதுக்கூட்டம்: கருணாஸ், தனியரசு பங்கேற்பு

Published on 02/03/2018 | Edited on 02/03/2018
mjk


மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் சமூகநீதி பொதுக்கூட்டம்  நாகை (தெற்கு) மாவட்டம் சார்பில் பிப்- 28- 2018 அன்று நாகப்பட்டிணத்தில் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA,  முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


அரங்கத்தில், முன்னதாக தமிழை தேசிய மொழியாக்க குரல் கொடுத்த காயிதே மில்லத்தின் பெயரால் கொடி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கட்சி கொடியை ஏற்றி வைத்தார். 


மேடைக்கு சமூக நீதி காத்த வீராங்கனை ஜெ.ஜெயலலிதா அம்மா மேடை  என பெயர் சூட்டப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் நடைபெற்ற அவுரித் திடலுக்கு சமூக நீதிப் போராளி முன்னாள் பிரதமர் V.P சிங் என்றும், நீட் தேர்வு எதிர்ப்பு போராளி தியாகி அனிதா என்றும் நுழைவாயில்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.

 
பெண்கள் பகுதிக்கு தூய்மையான பொது வாழ்வின் ஊழியர் என்று அழைக்கப்பட்ட அன்னை தெரஸா அவர்களின் பெயரும், ஆண்கள் பகுதிக்கு தமிழர்களின் இனமானம் காத்த தந்தை பெரியாரின் பெயரும் சூட்டப்பபட்டிருந்தது. திடல் முழுக்க WiFi வசதி செய்யப்பட்டிருந்தது ஒரு புதிய முயற்சியாகும். 

 

mjk2

எல்லா சமூக மக்களும் வேறுபாடின்றி கலந்து கொண்டது மஜகவின் சிறப்பை எடுத்துக் காட்டியது. அரங்கத்திற்கு வெளியே புத்தக கடைகள் நிறைய இருந்தன. அங்கும் கூட்டம் அலைமோதியது. மாலை 7.00 மணியளவில் தொடங்கிய கூட்டம் இரவு வரை அதே எழுச்சியோடு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


இக்கூட்டத்தில் தமிமுன் அன்சாரியின் 22 மாத தொகுதி செயல்பாடு அறிக்கையை கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் வெளியிட மும்மத தலைவர்கள், "தமிழ்செம்மல்" செய்யது முஹம்மது கலிபா சாஹிப், மஞ்சகொல்லை பிள்ளையார் கோயில் குருக்கள் குமாரசாமி, குருக்கள்.ரமேஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 

மஜக தலைமைக் கழக வளர்ச்சி நிதியாக 1 லட்சம் ரூபாயை நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களிடம் வழங்கினர்.  கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், வாஞ்சூர் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும், தமிழக மீனவர்களின் கடல் உரிமையை பாதுகாக்க வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்., நீட் தேர்வை இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

 இப்பொதுக் கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கானோர் திரண்டிருந்தனர். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் நாகை மாவட்டத்தை தங்களது கோட்டைகளில் ஒன்றாக மஜக நிரூபித்திருக்கிறது என்பது தான் உண்மை என தெரிவித்துள்ளது மஜகவின் தகவல்தொழில் நுட்பஅணி.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.