சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் முத்துக்கோன் – பாக்கியத்தாய் அம்மாள் தம்பதியினருக்கு 11.07.1710 அன்று மகனாகப் பிறந்தார். தன் இளம் வயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராக இருந்தார். அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர். இவரின் பிறந்த தினம் இன்று.
இதையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (11.07.2023) காலை 09.30 மணியளவில் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், “தமிழ் நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ் மங்காது ஒளி வீசிடும்” எனத் தெரிவித்துள்ளார்.