இறந்த முன்னோர்களுக்கு சர்வ அமாவாசை தினத்தில் நீர் நிலைகள், ஆற்று பகுதிகளில் தர்ப்பணம் செய்வது அல்லது திதி கொடுப்பது இந்து மற்றும் ஆன்மீக மக்களின் நம்பிக்கை.
மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும் குறிப்பாக ஆடி, தை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, ஆகிய மூன்று அமாவாசைகளில் மட்டுமே மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து நீராடுவது மரபு.
அன்றைய தினம் தென் மாவட்டத்தின் குற்றால அருவிக்கரைகள், தாமிரபரணியின் பாபநாசம், முறப்பநாடு, நெல்லையின் குறுக்குத்துறை போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வதற்காக மக்கள் கூட்டமாகத் திரளுவதுண்டு. ஆனால் தற்போதைய கரோனா தொற்று பரவல் காரணமாக நெல்லை மாவட்ட கலெக்டரான ஷில்பா, அருவிக்கரைகள் நீர் நிலைகளில் மக்கள் கூட்டத்தை தடுக்கும் வகையில் தர்ப்பணத்திற்காக 5 நாட்கள் தடை விதித்திருக்கிறார். இதன் காரணமாக குற்றால அருவிக்கரைகள், முறப்பநாடு பாபநாசம் குருக்குத்துறை ஆற்றங்கரைகள் போலீஸின் பாதுகாப்பிருப்பதால் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இதுகுறித்து பாபநாசம் பகுதியின் பிராமநாயக குருக்கள் சொல்லும்போது, “அமாவாசை தர்ப்பண நாட்களில் மக்கள் பிதுர்க்களுக்கான திதி கொடுப்பதற்கு முக்கிய ஆற்றங்கரையான இந்தப் பாபநாசம் ஆலயம் வருவார்கள். அவர்களுக்கான வேத பாராயணம் மந்திரங்கள் மூலம் தர்ப்பணம் செய்வதால் கிடைக்கும் வருமானமே எங்களைப் போன்ற நூற்றுக்கணக்கான குருக்கள்களின் வாழ்வாதாரம். கரோனா காலம் என்பதால் முக்கியமான கடந்த ஆடி அமாவாசையும் தடையானது. நம்பிய மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் கூடாது என தடை விதிக்கப்பட்டது. அம்பை டி.எஸ்.பி.யான பிரான்சிஸ் எங்களை அழைத்து கூட்டத்தை கூட்டி தடை பற்றி தெரிவித்ததை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
இன்றைய தினத்தில் மற்ற தை, ஆடி மாத அமாவாசையைக் காட்டிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும். ஆலய வருமானம், எங்களைப் போன்ற நேரடிக் குருக்கள்கள் மறைமுக வியாபாரம் கொண்டவர்களின் சுமார் ஒரு கோடி அளவிலான வருமானம் போய்விட்டது. இதில் கவனிக்க வேண்டியது அமாவாசை தினங்களையே நம்பியுள்ள எங்களின் 350 குருக்கள் குடும்பங்களின் ஜீவாதாரம் பாதிக்கப்பட்டு, நிர்க்கதியாக நிற்கிறோமே. இன்றைய இந்த வருமானம் தான் வரும் தை மாதம் வரை எங்களின் ஜீவாதாரத்திற்கு தாக்குப் பிடிக்கும். அது போய்விட்டது. வரும் தை மாதம் எந்த நிலைக்குத் தள்ளப்படுமோ. ஆறுமாதகாலமாக அந்தரத்திலிருக்கிறது எங்களின் வாழ்வாதாரம்” என்கிறார் உடைந்த குரலில்.