சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.சி.டி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். 4 மணி வரை அவர் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்தார். அதன் பிறகு அவர் மாமல்லபுரம் புறப்பட்டு செல்கிறார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவரை முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் வரவேற்றனர்.
பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் உள்ள ஏழாம் நூற்றாண்டு பல்லவர் காலத்து சிற்பங்களை, கோவில்களை பார்வையிட உள்ளனர். சீன அதிபரை பிரதமர் மோடி 3 இடங்களுக்கு அழைத்து செல்ல உள்ளார்.
முதலில் அவர்கள் பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவான உலக புகழ்பெற்ற அர்ஜுனன் தபசு காட்சியை காண உள்ளனர். இதற்காக அந்த பகுதி சிற்பங்கள் சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென்று மாற்றப்பட்டுள்ளன. பிரதமர் மோடியும், சீன அதிபரும் இந்தப் பகுதிக்கு வருவதால் அந்தப் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சீன அதிபரும் பிரதமர் மோடியும் முதல் சந்திப்பு நடக்கும் இடத்தில் கை கொடுத்து ஒத்திகை பார்த்தனர் அதிகாரிகள்.