Skip to main content

நூதன முறையில் ஏமாற்றி 11 சவரன் நகையை கொள்ளையடித்த போலி மந்திரவாதி!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021
The magician who cheated in an innovative way and robbed the 11 pound necklace

 

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள காந்திரோடு பகுதியில் வசித்து வருபவர் சீதாபதி. இவரது மனைவி ராஜலட்சுமி(63). இவருக்கு உடல் வலி, கை-கால் வலி இருந்து வந்துள்ளது. இதற்காக இவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்படி இருந்தும் அவருக்கு கை-கால் வலி குறையவில்லை இதை அக்கம்பக்கத்தினரிடம் அவ்வப்போது கூறி புலம்பிக் கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத மந்திரவாதி நபர் ஒருவர் வந்துள்ளார்.

 

அவர் ராஜலட்சுமியிடம் உங்களுக்கு தீராத கை-கால் வலி இருப்பதாகவும் அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியதோடு உங்கள் கணவர் தான் என்னை அனுப்பி வைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய ராஜலட்சுமி அந்த மந்திரவாதியை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டின் பூஜை அறை முன்பு மந்திரவாதியை அமரவைத்துள்ளார். அப்போது மந்திரவாதி பூஜைக்கு தேவையான சாமான்களை சேகரித்து எடுத்துக்கொண்டு வருமாறு கூறியுள்ளார். பூஜை செய்யும்போது அதில் தங்க நகை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே ராஜலட்சுமி தன் கழுத்தில் இருந்த மூன்று தங்கச் செயின்களை கழற்றி கொடுத்துள்ளார்.

 

11 சவரன் தங்கச் செயின்களை வாங்கிய மந்திரவாதி பூஜை செய்ய வைத்திருந்த தண்ணீர் சொம்புக்குள் போட்டு விட்டு ஓம்,க்ரீம்,க்ரீம் என்று ராஜலட்சுமிக்கு புரியாத பாஷையில் ஏதேதோ மந்திரங்களை சொல்லி பூஜை செய்துள்ளார். ராஜலட்சுமி மிகவும் பவ்யமாக அமர்ந்து கொண்டார். பூஜை முடிந்ததும் விபூதி பிரசாதம் வாங்குவதற்காக ராஜலட்சுமியை குளியலறைக்கு சென்று கை கால்களை கழுவி சுத்தம் செய்துகொண்டு வருமாறு கூறியுள்ளார். ராஜலட்சுமியும் அந்த மந்திரவாதி கூறியபடி கை, கால்களை கழுவி கொண்டிருக்கும் போதே அந்த மந்திரவாதி ராஜலட்சுமியை உள்ளே வைத்து குளியலறை கதவை வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு ராஜலட்சுமி கழற்றி கொடுத்த நகையை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமறைவாகிவிட்டார்.

 

கைகால்களை சுத்தம் செய்துகொண்டு குளியலறை கதவை திறக்க ராஜலட்சுமி முயற்சி செய்யும்போது கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே குளியலறையிலிருந்து கத்தி கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து பாத்ரூம் கதவை திறக்க செய்துள்ளார். அதன் பிறகே தனது நகையை அந்த போலி மந்திரவாதி பறித்துச் சென்றது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து ராஜலட்சுமி கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கை-கால் வலிக்கு மந்திரம் போடுவதாக கூறி நகை பரித்து சென்ற போலி மந்திரவாதியை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த நூதன கொள்ளை சம்பவம் கள்ளக்குறிச்சி நகர மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.