Madurai vaigai river

மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக, வைகை ஆற்றில் மழை நீர் வரத் தொடங்கியது. இதையடுத்து மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள தடுப்பணைகள் மழை நீரால் நிரம்பியது. தண்ணீர் செல்ல வேண்டிய பகுதியில் முழுவதிலும் ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில், நிரம்பிய தண்ணீர் தரைப்பாலத்தில் ஓடத் தொடங்கியுள்ளது.

Advertisment

மேலும், தடுப்பணையில் உள்ள நீரில் முழுவதிலுமாக நுரை பொங்கி காட்சியளிப்பதோடு, வைகை ஆற்றோரப் பகுதிகளான செல்லூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் ஆளுயரத்திற்கு நுரை பொங்கிநிற்கிறது. இதனால்,பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து நுரை மற்றும் ஆகாயத் தாமரையை நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதனால் சாலை முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அதிகளவு நுரை பொங்குவதால், ஏராளமான பொதுமக்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். கழிவுநீரில் இருந்து வெளிவரக் கூடிய நுரையின் ஆபத்தை உணராதசிறுவர்கள், நுரையைக்கையில் எடுத்து விளையாடுவதால், தொற்றுநோய்ப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் கழிவுநீர்க் கலப்பதை தடுக்க, பல கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தபட்டவரும் நிலையில், மீண்டும் சாக்கடை நீர் வைகையாற்றில் கலப்பதால் நுரை பொங்குகிறதா இல்லையெனில் ரசாயனம் ஏதும் கலந்து நுரை பொங்குகிறதா என நீர்நிலை ஆர்வலர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

Madurai vaigai river

ஓடைகளில் தொடர்ந்து நுரை மற்றும் கழிவுநீர் பெருகிவருவதால், வைகை ஆற்றிலும் நுரை பொங்கி கழிவு நீராக மாறும் நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீர், சட்டவிரோதமாகக் கலப்பதால், இது போன்ற நிலை ஏற்பட்டுவருகிறது. மழை பெய்துவரும் நிலையில், வைகை ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.