Skip to main content

சினிமாக்காரர்கள் என்றால் மதுரை ரசிகர்கள் ஆர்வம்! -தியேட்டரில் செல்ஃபி மழை!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

சினிமா ரசிகர்களையும் மதுரையையும் ஒருக்காலும் பிரிக்க முடியாது. சினிமாவுக்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில் நம்பர் ஒன் ரசிகர்கள் ஆக இருக்கிறார்கள் மதுரைக்காரர்கள். 
 

nnor



1931-ல் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸில் நடித்த டி.பி.ராஜலட்சுமியை ‘சினிமா ராணி’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். சினிமா கலைஞர் ஒருவருக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது என்றால், அது டி.பி.ராஜலட்சுமிக்குத்தான். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலிருந்து இன்று வரையிலும் மதுரையில் தெருவுக்குத் தெரு ரசிகர் மன்றங்கள் உண்டு. உதயநிதி உட்பட தமிழ் சினிமா ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் இங்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. சினிமா பிரபலங்களுக்கு பட்டம் அளித்துப் பாராட்டுவிழா நடத்துவது மதுரையில் வாடிக்கையாக நடப்பதுதான்.  

காலம் மாறலாம். ஆனால், மதுரை ரசிகர்களின் சினிமா ரசனை மட்டும் மாறவே இல்லை. 16-ஆம் தேதி மதுரை வெற்றி தியேட்டரில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பார்க்கச் சென்றேன். இடைவேளையின்போது, தியேட்டருக்குள் மிகவும் கருப்பாக இருந்த கண்ணாடி அணிந்த நபர் ஒருவர் பக்கத்தில் நின்று பலரும் செல்பி எடுத்தனர். பெண்களும் ஆர்வம் காட்டினர்.  “இவர் யாரு?” செல்பி எடுத்துக்கொண்ட ஒருவரிடம் கேட்டேன். உதட்டைப் பிதுக்கினார். இன்னொருவர் பதில் சொன்னார்.

“யூ டியூப்ல வர்றவராம். இந்தப் படத்தோட டீம்ல இவரும் இருக்காராம். அடுத்து ஒரு சினிமா டைரக்ட் பண்ணப் போறாராம்.” என்று அவர் சொன்னதெல்லாம் ‘ராம்’களாகவே இருந்தன. ஒருவர் செல்பி எடுத்தால் போதுமே! படம் பார்க்க வந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் படையெடுத்துவிட்டார்கள். அவரை மொய்த்தார்கள்.  பிறகுதான் தெரிந்தது, படத்தில் ஹீரோ ரியோ ராஜுக்கு இணையாக வரும் காமெடி நடிகர் விக்னேஷ்காந்தும் கடைசி வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது. அவ்வளவுதான்..  படத்தைக்கூட பார்க்காமல் விக்னேஷுடன் செல்பி எடுப்பதில் ஆர்வமானார்கள் ரசிகர்கள். தியேட்டர் செக்யூரிட்டி வந்து ரசிகர்களை அவரவர் சீட்டுக்குப் போகச் சொல்லி விரட்டினாலும்,  யாரும் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. பிறகென்ன? படம் முடியும்வரையிலும் செல்ஃபி ஃப்ளாஷ் மழைதான்!

சினிமா ரசனை பொங்கி வழியும் மதுரை ரசிகர்களைப் போல் ஒட்டுமொத்த தமிழகமும் பழையபடியே தொடர்ந்து இருந்துவிட்டால், அடுத்த தமிழக முதல்வர் நிச்சயம் ஒரு சினிமா ஸ்டார்தான்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.