Skip to main content

’என்னை கட்டம் கட்டினாலும் பரவாயில்லை’-ஓ.பி.எஸ்க்கு எதிராக கொந்தளித்த ராஜன்செல்லப்பா

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

 


கட்சியிலும் ஆட்சியிலும் தளிவான முடிவெடுக்க அதிமுகவுக்கு வலிமையான ஒற்றை தலைமை தேவை  என  மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு கோரிக்கை வைத்தார். 

 

மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் இப்படி ஒரு பரபரப்பு பேட்டியை அளித்தார். அதில் அவர் கூறியதாவது: இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.   ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. எனவே ஆளுமைமிக்க தலைமையை உருவாக்க வேண்டும். அதிமுகவில் யாரிடம் இப்போது அதிகாரம் இருக்கிறது என்றே தெரியவில்லை. எனவே விரைவில் அதிமுக செயற்குழு, மற்றும் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்க வேண்டும். 

 

r

 

ஜெயலலிதாவால் அங்கீகாரம் கொடுக்கப்பட்டவர்தான், தலைமைப் பதவியில் இருக்க வேண்டும். அது யார் என்பதை பொதுக்குழுவில் ஆலோசிக்க வேண்டும். இப்போது தலைமையில் உள்ள இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும், அவர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. 

 

யார் யாரோ கட்சியின் கொள்கைகளை தீர்மானிக்கிறார்கள்.  நான் சொல்லும் கருத்துக்கள்,  சில இடர்பாடுகள் அதிமுகவை பலவீனப்படுத்தி விடக்கூடது.  உட்கட்சி பூசலால்தான் என் மகன் தோற்றார்.   அண்ணா,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா  வகுத்த கொள்கைகளை எக்காரணத்தை கொண்டும் விட்டுதரமுடியாது. ஓ.பி.எஸ்,  மகனோடு தனியாக ஜெயலலிதா சமாதிக்கு போனது ஏன்? யார் பின்னனியில் செயல்படுகிறார்கள் என்றே தெரியவில்லை.

 

மதுரையில் செயல்படாத அமைச்சர்கள் தான் உள்ளனர்.  இந்நேரம் ஜெயலலிதா இருந்தால் இப்ப இருக்கும் அமைச்சர்கள் இருக்கமாட்டார்கள்.   இரு தலை இருப்பதால் கட்சியில் தலைவிரித்து ஆடுகிறது.  உள் பாலிடிக்ஸ் யார் யாரையும் கட்டுபடுத்த முடியவில்லை.   ஒற்றை தலைமையை கொண்டுவந்தால் ஒழிய கட்சியை காப்பாற்றமுடியாது.    உடனடி அறுவை சிகிச்சை எடுக்கவேண்டியது  கடமை.  உடனடியாக பொதுகுழுவை கூட்டினால் என் கருத்தைதான் பெரும்பாலானவர்கள் கூறுவார்கள்.   என்னை கட்டம் கட்டினாலும் பரவாயில்லை கட்சி காப்பாற்றபட வேண்டும் அதற்கு ஒற்றை தலைமை வேண்டும் ’’என கொந்தளித்தார் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா.

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.