Skip to main content

ஆன்லைன் சூதாட்டத்தால் தம்பதிகள் தற்கொலையா? - மதுரை அருகே சோகம் 

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மி மூலம் ஏற்பட்ட இழப்பு காரணமாக தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மதுரை மாவட்டம் நாகமலை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இம்மரணம் குறித்து நாகமலை போலீஸார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

m

 

மதுரை மாவட்டம் நாகமலை அருகே உள்ளது என்ஜிஜிஓ காலனி. இங்குள்ள தெரசா வீதியில் வேங்கட சுப்பிரமணியன் (41), பட்டு மீனாட்சி (33) ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

 

வேங்கட சுப்பிரமணியன் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் என்றும் அவரது மனைவி பட்டு மீனாட்சி மதுரை திருநகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை நிறைவு செய்த வேங்கட சுப்ரமணியன் டேட்டா அனலைஸிஸ் எனும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றவராவார். ஆகையால் பல்வேறு அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தப் பணிகளைச் செய்து வந்ததுடன், தன்னுடைய துறை சார்ந்த ஆய்வில் பல மாணவ, மாணவியரையும் வழிநடத்தி வந்தார்.

 

பட்டு மீனாட்சி ஆய்வு மாணவியாக வேங்கட சுப்பிரமணியனிடம் வந்து சேர்ந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து. கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர்களின் வீடு ஆள் அரவமின்றிக் கிடந்ததுடன், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நாகமலை போலீஸாருக்குத் திங்கட்கிழமை பிற்பகல் தகவல் அளித்துள்ளனர்.

 

m

 

வீட்டை சோதனை செய்த போலீஸார், கதவைத் திறந்து மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கே வேங்கட சுப்பிரமணியனும், அவரது மனைவி பட்டு மீனாட்சியும் மிகக் கோரமான நிலையில் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளனர். இதனையடுத்து பிரேதங்களைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இறந்து 5 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 

தம்பதிகளின் மரணம் குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகையில், 'யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் இன்றி, வாழ்ந்து வந்தவர்கள். திடீரென இவ்வாறு இறந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. கம்ப்யூட்டர், ஆன்லைன் தொடர்பான வேலைகளை கணவனும் மனைவியும் சேர்ந்தே செய்து வந்தனர். மிக ஆடம்பரமாக வாழ்ந்த இவர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக பணத்தை இழந்துவிட்டார்கள். ஆகையால் அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்திருக்கலாம்' என்றனர். 

மேலும் இவர்களுக்குத் திருமணமாகி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இதுவரை குழந்தைப் பேறு இல்லை. அதன் காரணமாகவும் மனம் நொந்து இந்த முடிவை மேற்கொண்டிருக்கக்கூடும் எனவும் தெரிவித்தனர். நாகமலை போலீஸார் அங்கு கிடைத்த ஆவணங்களைக் கைப்பற்றி தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.