
மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே நுழைவுவாயில் அருகே ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நுழைவு வாயில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி இதனை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் படி நேற்று (12.02.2025) இரவு நுழைவுவாயிலை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக 2 ஜே.சி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது இடிபட்ட நுழைவு வாயிலின் கான்கிரிட் தூண் ஜே.சி.பி. வாகனம் மீது எதிர்பாராத விதமாக விழுந்தது. இதனால் ஜே.சி.பி. டிரைவர் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நல்லதம்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நுழைவுவாயிலை இடிக்கும் போது விபத்து ஏற்பட்டு ஜேசிபி டிரைவர் (ஆபரேட்டர்) பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கான்கிரீட் நுழைவுவாயில் தூண் ஜே.சி.பி. இயந்திரம் மீது இடிந்து விழும் காட்சிகள் வெளியாகி மக்களைப் பதைபதைக்க வைக்கிறது.
இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. தளபதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மாட்டுத்தாவணி நக்கீரர் அலங்கார நினைவு வாயிலை இடிக்கும் பணியின் போது பொக்லைன் மீது தூண் விழுந்து விபத்து ஏற்பட்டதில் பொக்லைன் ஆப்ரேட்டர் நாகலிங்கம் என்பவர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.