மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வைர முருகன். இவரது மனைவி சௌமியா. இவர்கள் இருவரும் வீட்டு வாசல் முன்பு பழக்கடைநடத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சௌமியா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஜனவரி 21- ஆம் தேதி செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த மார்ச் 2- ஆம் தேதி இரவு பெண் குழந்தை இறந்துவிட்டதாக கூறி புதைத்துள்ளனர். இந்த தகவலை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. இது அக்கம்பக்கம் வசிப்பவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்த பொது மக்கள் பெண் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள்.

MADURAI  INCIDENT POLICE ARRESTED PARENTS

Advertisment

இதனையடுத்து உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா தாசில்தார் செந்தாமரை மற்றும் சக்தி போலீசார் நேற்று (05/03/2020) மாலை வீட்டுக்குச் சென்றனர். வைரமுருகன் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்துக்கு கீழே குழி தோண்டினர். அப்போது குழந்தை புதைக்கப்பட்டது தெரியவந்தது. குழந்தையைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு காவல்துறைக்கு கிடைத்த மருத்துவ அறிக்கையில் எருக்கம்பால் கொடுத்து பெண் சிசுக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

Advertisment

அதைத் தொடர்ந்து வைரமுருகன் மற்றும் அவரது மனைவி சௌமியா ஆகியோரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வறுமையின் காரணமாக பெண் சிசுவை எருக்கம்பால் கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். அதையடுத்து சிசுவின் பெற்றோர் மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தகாவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.