Madurai incident acutest surrender in police station

Advertisment

மதுரை மாவட்டம், திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவ பிரசாந்த் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த சடையாண்டி என்பவரது மகளும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் எதிர்ப்பை மீறி நேற்று திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து திடீர் நகர் காவல் நிலையத்திற்க்கு சென்று அவர்கள் பாதுகாப்பு கேட்டனர்.

அங்கே போலீசார், இருவரது பெற்றோர்களையும் அழைத்து சமரசம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சிவபிரசாந்தின் தந்தை ராமச்சந்திரன் மட்டும் காவல் நிலையத்திற்கு வந்து, மகனின் திருமணத்தில் எதிர்ப்பை நீக்கிக்கொண்டதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். அதேநேரம் பெண்ணின் தந்தை சடையாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் சமரச பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையத்திற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் பெரியார் பேருந்து நிலையம் அருகே சிவ பிரசாந்தின் தந்தை ராமச்சந்திரனை, பெண்ணின் தந்தை சடையாண்டி சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து சடையாண்டி தான் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ராமசந்திரன் உயிரிழந்தார். இதனையடுத்து சடையாண்டி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து திடீர் நகர் போலீசார், சடையாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

காதல் திருமணம் செய்து கொண்ட மகள் மீதான ஆத்திரத்தில் மணமகனின் தந்தையை வெட்டி கொலை செய்து காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.