Skip to main content

சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலை; அடுத்தடுத்த சம்பவங்களால் மாணவர்கள் அதிர்ச்சி

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

madras iit student incident police investigation started and shocking in students 

 

சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த  ருவன் சன்னி ஆல்பர்ட் (வயது 25) என்ற மாணவர்  எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக மன அழுத்தத்தால் காணப்பட்ட இவர் தனது ஆய்வு வகுப்புகளுக்கு சரிவர வராமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வகுப்புகளை முடித்துவிட்டு விடுதிக்குச் சென்ற இவர் இரவு உணவு அருந்துவதற்கு அறையில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது சக நண்பர்கள் ருவன் சன்னி ஆல்பர்ட் அறைக்குச் சென்று பார்த்தபோது, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து சக மாணவர்கள் இதுகுறித்து விடுதியின் காப்பாளர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு கோட்டூர்புரம் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவரின் அறையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது மாணவன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், 'என்னால் சரிவர படிக்க இயலவில்லை; உணவு அருந்த முடியவில்லை; என்னை மன்னித்து விடுங்கள்.' என்று எழுதி வைத்திருக்கிறார். மேலும் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை ஐஐடியில் பி.டெக் முதலாமாண்டு படித்து வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரேஷ் (வயது 21) என்ற மாணவர் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மனக் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் தனது அறையில் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மயக்க நிலையில் இருந்த மாணவனை மீட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

சென்னை ஐஐடியில், பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சென்னை ஐஐடியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பேராசிரியர் உட்பட 11 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐஐடியில் தொடர்ந்து தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் ஏற்படுவதால் அங்கு படித்து வரும் மாணவ மாணவியர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்