திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
இதையடுத்து கடந்த ஜூன் 25-ஆம் தேதி கோவை தெற்கு தாசில்தார், பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த விடுதியில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்டவிரோதமாக ஒன்றாகத் தங்கியிருந்தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர்.
விடுதியை மூடுவதற்கு முறையான சட்ட விதிகளை போலீசார் பின்பற்றவில்லை என்று விடுதி தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், "திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக விடுதி அறையில் தங்குவதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் ஒரு அறையில் திருமணம் ஆகாத பெண்ணும் ஆணும் தங்க கூடாது என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய அவர், ஒரு அறையில் மது பாட்டில்கள் இருப்பதால் அங்கு தவறு நடந்துள்ளது என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றார். பின்னர் விடுதி நிர்வாகம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்த அவர், இந்த உத்தரவு நகல் கிடைத்து 2 நாட்களுக்குள், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை மாவட்ட கலெக்டர் அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.