/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai.jpg)
நீதிபதிகள் தரமான தீர்ப்புகளை வழங்க இளம் வழக்கறிஞர்கள் துணை நிற்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கேட்டுக்கொண்டார்.
திருச்சியில் வழக்கறிஞர் சங்க பொன்விழா ஆண்டையொட்டி மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர்களுக்கு பாராட்டு விழா திருச்சி எல்.கே.எஸ்.மகாலில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கலந்து கொண்டு 50 ஆண்டுகாலம் பணிபுரிந்து வரும் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்.
அப்போது தலைமை நீதிபதி பேசியதாவது:-
மூத்தவர்களிடம் நாம் அதிகம் கற்று கொள்ள வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் முன்னுதாரணமாக இருந்து வழிகாட்ட வேண்டும். மனுதாரர்களுக்காக தான் நாம் இருக்கிறோம். ஆகவே அவர்களிடம் சேவை மனப்பான்மையுடன் அணுக வேண்டும். வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேநேரத்தில் தரமான தீர்ப்புகளையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். நீதிபதிகள் தீர்ப்பின் மூலமாக தான் பேச முடியும்.
அதனால் தீர்ப்பினை நன்கு எழுத வேண்டும். தீர்ப்பை படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். நீதிபரிபாலனத்தில் நீதிபதிகளுக்கு மட்டும் பங்கு கிடையாது. வழக்கறிஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இளம் வழக்கறிஞர்கள் சட்டத்தை ஆழ்ந்து படித்து தங்களது சட்ட அறிவை மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். நீதிபதிகள் தரமான தீர்ப்புகளை வழங்க இளம் வழக்கறிஞர்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றையும் நட்டார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கோவிந்தராஜ், ஜெயசந்திரன், மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, வழக்கறிஞர்கள் சகாபுதீன், சக்கரபாணி, லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வன் வரவேற்றார்.
இதில் துணைத்தலைவர் கமாலுதீன், இணை செயலாளர் சதீஷ்குமார், அரசு வக்கீல்கள் சம்பத்குமார், ஜெயராமன் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ஜெயசீலன் நன்றி கூறினார்.
ஜெ.டி.ஆர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)