ADVERTISEMENT

"வழிபாட்டுத் தலங்களுக்கு விலக்கு தேவை!" - தமிமுன் அன்சாரி கோரிக்கை!

12:01 AM Apr 09, 2021 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பரவலின் இரண்டாவது அலையை ஒட்டி தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, அரசியல் நிகழ்சிகள், திருமணம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளது. இதையொட்டி, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மத வழிபட்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவுவதால், தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க இயலாதது என்பதால், இதை வரவேற்கிறோம்.

அதே சமயம், வழிபாட்டுத் தலங்களுக்கு சில விலக்குகள் தேவை என்பதையும் தமிழக அரசு உணர வேண்டும். வழிபாட்டு மையங்கள் என்பது மக்கள் மன அமைதி பெறும் இறையில்லங்களாக இருப்பதால், அங்கு மக்கள் கட்டுப்பாடுகளுடன் வந்து செல்வதற்கு சில சலுகைகளை அளிக்க வேண்டும்.

கோயில், மசூதி, தேவாலயம் என மக்கள் கூடி பிரார்த்திக்கும் இடங்களில் நேரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, புனித ரமலான் மாதம் இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்குவதால், மக்கள் இரவு நேர வழிபாட்டை நடத்தும் வகையில், இரவு 10 மணி வரை மசூதிகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இதற்கு மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு வெளியிடலாம். இதை, எல்லோரும் பின்பற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை. இதே போன்று எல்லா மதங்களையும் சேர்ந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் ஆன்மிகக் காரணங்களுக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT