
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்து ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் இருந்து 45க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சொகுசு பேருந்து ஒன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் இயக்கி வந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் புறவழிச்சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த பொழுது தூக்கக் கலக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது தனியார் பேருந்து மோதியது.
இதில் பேருந்து ஓட்டுநர் பன்னீர்செல்வம் உட்பட பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.