Skip to main content

‘குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்’ - வானிலை மையம் தகவல்!

Published on 07/12/2024 | Edited on 07/12/2024
A low pressure area may develop Meteorological Department informs

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, 12ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் இன்று (07.12.2024) பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்