வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடமேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மூலம் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடையத் தொடங்கி இருக்கும் நிலையில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.