Skip to main content

குறைவான மின் அழுத்தும்; மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்.!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021
Low electrical pressure; The youths who besieged the electricity office

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் சுமார் 75 கிராமங்களில் பல மாதங்களாக பற்றாக்குறையான, குறைவான மின்சாரத்தால் மின் விளக்குகள், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், டிவி, மின்மோட்டார்கள் எதுவுமே இயங்காமல் அடிக்கடி பழுதாகிவருவதால் அப்பகுதி மக்கள் நிம்மதியாக தூங்கி பல மாதங்களாகிவிட்டது. ஏம்பல் கிராமத்தைச் சுற்றியுள்ள தாணிக்காடு, மதகம், பறையன்காடு, வயலாங்குடி,  சிறுகத்தான்குடி உள்ளிட்ட 52 கிராமங்களில் பல மாதங்களாக குறைந்த மின் அழுத்தத்தால் விளக்குகள் கூட எரியாமல் அவதிப்படும் மக்கள் பலமுறை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் முறையிட்டும் பயனில்லை. 

 

புதிய துணை மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தினாலும் அதற்கான எந்தப் பணியும் நடக்காததால் 52 கிராம மக்களும் தூக்கமின்றி தவிக்கின்றனர். புதிய மக்கள் பிரதிநிதிகளிடமும் கோரிக்கை வைத்துக் காத்திருக்கின்றனர். மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்யும்விதமாக மின்சாரம் ஆய்வும் செய்தனர். ஆய்வில் குறைந்த மின் அழுத்தம் வருவதைக் கண்டுபிடித்தனர். ஆனால் அதை சரி செய்யத்தான் முடியவில்லை. மேலும் இதேபோல மீமிசல், கோட்டைப்பட்டினம் பகுதியிலும் பல கிராம மக்கள் குறைந்த மின்சாரத்தால் மின் விளக்குகள் கூட எரியாமல் ஃபேன் ஓடாமல் கொசுக்கடியால் டெங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அதே நேரத்தில் கடற்கரையோரம் உள்ள இறால் பண்ணைகளுக்கு மட்டும் சரியான அளவு மின்சாரம் கிடைக்கிறது.

 

மின்சாரம் குறைவாக வருவதால்தான் இப்படி குறைவாக கொடுக்கிறோம் என்று இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் இறால் பண்ணைகள் தொடர்ந்து மின் திருட்டில் ஈடுபடுவதாகவும் இதை மின்வாரிய அதிகாரிகள் கண்டும் காணாததுபோல இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அதேபோல அறந்தாங்கி அருகில் உள்ள நாகுடி துணைமின் நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்குச் செல்லும் மின்சாரம் குறைந்த அளவே செல்வதால் மின்சாதனப் பொருட்களை இயக்க முடியாமலும் பழுதாகியும் உள்ளன. இதுகுறித்து களக்குடி கிராம இளைஞர்கள் பலமுறை மின்வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், ஞாயிற்றுக்கிழமை மாலை குறைந்த மின்சாரத்தால் இயங்காத டிவி உள்ளிட்ட மின்சாதப் பொருட்களைத் தூக்கிக்கொண்டு மின்வாரிய அலுவலகம் சென்று முற்றுகையிட்டனர். 

 

இப்படி அறந்தாங்கி தொகுதியில் மட்டும் சுமார் 75 கிராமங்கள்வரை பாதிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் வீட்டுக்குவரும் மன்சாரத்தைத்தான் இறால் பண்ணைக்குத் திருடுகிறார்கள் என்கின்றனர். இந்த மின் பற்றாக்குறையைப் போக்காவிட்டால் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் காட்சிப் பொருளாகவே இருக்கும் என்பதே உண்மை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.