பசுமைப் பண்ணைகளில் குறைந்த விலையில் தக்காளி; மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்

Low cost tomatoes in green farms; Government advice to people

தக்காளி விளையக்கூடிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை அதிகரித்ததால் பொதுமக்கள் அவதியுற்ற நிலையில் தற்போது அரசு பசுமைப் பண்ணைகளில் தக்காளி வாங்க மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில், "சமீபத்தில் பெய்து வருகின்ற கனமழையின் காரணமாக அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் தக்காளியின் சில்லறை விற்பனை விலை ரூ.60/- வரை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்யும்பொருட்டு கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.). சிந்தாமணி, நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய கூட்டுறவு பண்டகசாலைகளால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி தற்போது ரூ.40 முதல் 42 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொது மக்கள் இதை வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu tomato
இதையும் படியுங்கள்
Subscribe