
ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு கணேசபுரம், சிங்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி(25). மைதிலி கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வரும். இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு மைதிலி தாய் வீட்டுக்கு வருவது வழக்கம். பின்னர் கணேசன் சமாதானப்படுத்தி மனைவியை உடன் அழைத்துச் செல்வார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து மைதிலி தாய் வீட்டில் வசித்து வந்தார். மைதிலிக்கு சின்ன வயதில் இருந்தே கோபப்பட்டால் தலையை சுவரில் முட்டிக் கொள்வது வழக்கம். இதனால் அவருக்கு தலைவலி இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மைதிலிக்கு மீண்டும் தலைவலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் உறவினர் ஒருவருக்கு போன் செய்து மைதிலியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு அவரது தாய் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.
பின்னர் அவரது உறவினர் மைதிலி வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் மைதிலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.