Love couple suicide

எதிரெதிரே வீட்டை சேர்ந்தவர்கள் காதலித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே சாவரபந்தம் கிராமத்தை சேர்ந்தவர் அனுமப்பா மகன் ஏம்மண்ணா. 26 வயதாகும் இவர் 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவரது வீட்டுக்கு எதிரே சூரப்பா என்பவர் வசித்து வந்தார். சூரப்பாவுக்கு 21 வயதில் சூரம்மா என்ற மகள் இருந்தார்.

ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், எதிரெதிரே வீடு இருப்பதாலும் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலித்துள்ளனர். இவர்கள் இருவரும் பழகுவதை இருவீட்டாரும் சகஜமாக எடுத்துக்கொண்டனர்.

Advertisment

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசிக்கொள்ள முடியவில்லை. இருவீட்டாருக்கும் தெரியாமல் அவ்வப்போது சந்தித்து பேசி வந்தனர். தங்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்களோ? என்ற மன வருத்தத்தில் இருந்தனர்.

நேற்று இரவு 10 மணியளவில் இருவீட்டாரும் தூங்க சென்ற பிறகு, காதல் ஜோடியான ஏம்மண்ணாவும், சூரம்மாவும் வீட்டில் இருந்து வெளியேறி அனுமப்பாவுக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு வந்தனர். அங்கு உள்ள புளியமரத்தில் காதல்ஜோடி ஏம்மண்ணாவும், சூரம்மாவும் ஒரே கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அதிகாலையில் அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள் 2 பேரும் மரத்தில் பிணமாக தூங்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும், இருவீட்டாருக்கும் தெரிவித்துள்ளனர். சம்பவம் அறிந்து இருவீட்டாரும் ஓடோடி வந்துள்ளனர். இருவரின் உடல்களையும் கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

Advertisment

தற்கொலை சம்பவம் குறித்து அறிந்ததும் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்.ஐ. சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.