ADVERTISEMENT

"அன்பும் அரவணைப்பும் என்னிடம் எப்போதும் இருக்கும் - முதல் திருநங்கை செவிலியர்.!"

08:34 PM Dec 11, 2019 | kalaimohan

இந்தியாவிலேயே திருநங்கை ஒருவர் முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு செவிலியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 6 அடி உயரம் கொண்ட அவர், உயரத்தில் மட்டுமல்ல மற்றவர்களுக்கு உதவும் குணத்திலும் உயர்ந்து நிற்கிறார் .விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தனது பணியை துவங்கி உள்ளார்.

ADVERTISEMENT


தூத்துக்குடி மாவட்டம் சேர்வைகாரன்மடத்தை சேர்ந்த அன்பு ரூபி திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு கடந்த 2-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவிலியர் பணி ஆணை வழங்கினார். விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணி ஒதுக்கப்பட்டதால், தனது பணியை உற்சாகமாக தொடங்கி இருக்கிறார். பிளஸ்-2 வரை அன்புராஜ் ஆக இருந்த இவர். பள்ளிப் படிப்பின்போது தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் பெண் தன்மையை உணர்ந்தார்.

பள்ளி படிப்புக்கு பிறகு நெல்லையில் பி.எஸ்.சி செவிலியர் படிப்பை முடித்த இவர், ஆரம்பத்தில் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றினார். பின்னர் தூத்துக்குடியில் ஒரு மருத்துவமனையில் இரண்டரை ஆண்டுகள் செவிலியராக பணியாற்றினார். அப்போது அறுவை சிகிச்சை செய்து, தம்மை திருநங்கையாக மாற்றிக் கொண்டதோடு. பெயரையும் அன்புரூபி என்று அழைத்துக்கொண்டார்.

ADVERTISEMENT


"திருநங்கை ஆகிவிட்டதால் ஆரம்பத்தில் ஊராரும், உற்றாரும் ஒதுக்குவார்களோ என்று அஞ்சினேன். ஆனால், எனது தாயார் என்னை அரவணைத்தார். அப்பா இல்லாத என்னை கூலி வேலை செய்து தான் படிக்க வைத்தார். நண்பர்களும் ஆதரவு தந்தனர். வலியோடு மருத்துவமனைக்கு வருபவர்கள் திருப்தியுடன் வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டும். அதற்கு நாம் உதவ வேண்டும் என்பதற்காகவே இந்த பணியை தேர்வு செய்தேன். என் பெயரில் உள்ள அன்போடு அரவணைப்பையும் எப்போதும் வெளிப்படுத்துவேன்" என்கிறார் அன்பு ரூபி.!

சிறப்பாக செயல்படுங்கள் சகோதரியே..!

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT