சேலம் இரும்பாலை அருகே உள்ள எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (41). இவர், அப்பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார். ஜூன் 1 ஆம் தேதி, அவருடைய பட்டாசு கிடங்கில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சதீஸ்குமார், நடேசன் (50), பானுமதி (55) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாயினர்.
அந்த ஆலையில் வேலை செய்து வந்த மஜ்ரா கொல்லப்பட்டியைச் சேர்ந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), மணிமேகலை (36), பிரபாகரன் (30), பிருந்தா (28) ஆகிய 6 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், பிரபாகரன், மோகனா ஆகியோர் ஜூன் 3 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஜூன் 4 ஆம் தேதி மகேஸ்வரியும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதனால், சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மற்ற மூன்று பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.