Skip to main content

தீபாவளிக்கு பிறகு மீண்டும் லாரி ஸ்டிரைக்! ''மத்திய அரசு சொன்னது என்னாச்சு?''

Published on 27/10/2018 | Edited on 27/10/2018

டீசல், டோல்கேட் கட்டணம், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதாகச் சொல்லி மூன்று மாதத்திற்கு மேலாகியும் மத்திய அரசு கண்டுகொள்ளாததால், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு மீண்டும் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட லாரி அதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

 Lorry Strike again after Deepavali

 

தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலையைக் குறைக்கக்கோரியும், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம் மற்றும் டோல்கேட் கட்டணங்களைக் குறைக்கவும் லாரி அதிபர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்காததால் நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகும் மத்திய அரசு மவுனமாக இருந்ததால், கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி முதல் தொடர்ந்து எட்டு நாள்கள் நாடு முழுவதும் லாரி அதிபர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

 


இதற்கிடையே, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது லாரி அதிபர்களின் கோரிக்கைகள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மத்திய அரசு இது தொடர்பாக எவ்வித பூர்வாங்க நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

 

 
டீசல் விலை தாறுமாறாக எகிறியதால் லாரி தொழிலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, சரக்கு புக்கிங் கட்டணமும் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. 


இந்நிலையில், அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிடில் இரு தினங்களுக்கு முன்பு கூடி ஆலோசனை நடத்தினர். மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, தீபாவளி பண்டிக்கைக்குப் பிறகு மீண்டும் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக உறுதி செய்யப்பட்டது. 

 


இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில செயலாளர் தனராஜ் கூறுகையில், ''டீசல் விலையேற்றத்தால் நாளுக்குநாள் லாரி தொழில் நசிந்து வருகிறது. டீசல் விலை இப்போது 80 ரூபாயை நெருங்கிவிட்டது. மத்திய அரசும் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி எங்கள் கோரிக்கைகள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 


அதனால், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும், தீபாவளிக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம். வேலைநிறுத்தம் போராட்டத்தால், தேசிய அளவில் 70 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகளும் ஓடாது. இதனால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் வேலையிழப்பும் ஏற்படும். அதற்குள், மத்திய அரசு எங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தீவிரமடையும் போராட்டம்; பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் கூட்டம்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
escalating struggle Rally in petrol stocks

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் என 3 குற்றவியல் சட்டங்கள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாக்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்கில் சிக்கும் ஒட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் ஒட்டுநர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை என இச்சட்டம் கூறுகிறது.

எனவே விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து உத்திரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கார், பேருந்து, லாரி ஒட்டுநர்கள் முக்கிய சாலைகளை முடக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் குஜராத், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர்களும் ஈடுபட்டுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல்கள் இருப்பு உள்ள பெட்ரோல் பங்குகளை தேடி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருள் விலை உயர வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் குவிந்து வருகின்றனர்.

அதே சமயம் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஒட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று இரவு 7 மணியளவில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஓட்டுநர்கள் போராட்டம்; பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Drivers struggle; Central government calls for talks

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமனற கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன. அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் மீதான விவாதம் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி (20-12-2023) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் இந்த புதிய சட்டத்தால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யபட்டுள்ளது. விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் லாரி ஒட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அத்தியாவசியப் பொருட்கள் சேவை தடை பெற்றுள்ளது. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஒட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று இரவு 7 மணியளவில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என கூறப்படுகிறது.