Skip to main content

பைக் - லாரி - பஸ் மோதல்... தீப்பிடித்து எரிந்தது பைக் ..!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

highway.jpg

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (25). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறை எடுத்துக்கொண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பைக்கில் தனது ஊருக்கு வந்துகொண்டிருந்தார் பிரவீன் குமார். நேற்று அதிகாலை 3 மணி அளவில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலை வழியே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது விழுப்புரம் நோக்கி எதிரே வந்து கொண்டிருந்தது ஏசர் சரக்கு லாரி. அந்த லாரி வலது பக்கமாக வந்து பிரவீன் ஓட்டி வந்த பைக் மீது மோதியதில் பிரவீன்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியின் சக்கரத்தில் சிக்கிய பைக், சிறுது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. அதில் ஏற்பட்ட தீப்பொறியினால் லாரியின் அடியில் சிக்கிய பைக் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு பயந்துபோன டிரைவர், லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். அப்போது லாரியின் நான்கு டயர்களும் தீப்பிடித்து எரிந்தன.

 

அதே நேரத்தில் கோவையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு விரைவு பஸ், எரிந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இருப்பினும் பஸ் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை ஓரம்கட்டி நிறுத்தியதால், அதில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினார்கள். இதையடுத்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பிரவீன் குமாரின் பைக் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். பைக் - லாரி - பஸ் அடுத்தடுத்து மோதல் சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.