சேலத்தை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சூர்யா (22). லாரி ஓட்டுநர். திங்கள்கிழமை (பிப். 24) இரவு 9.30 மணியளவில், தனது தம்பி சதீஷிடம் செல்போனில் தொடர்பு கொண்ட சூர்யா, தன்னை சிலர் ரயில்வே தண்டவாளம் அருகே சுற்றிவளைத்து வெட்டிக்கொல்ல பார்க்கிறார்கள் என்று மட்டும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ், சூர்யாவை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் அவர் செல்போனை எடுக்கவில்லை. உறவினர்கள், ஊர்மக்கள் எல்லோரும் பாகல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே சூர்யாவைத் தேடிச்சென்றனர். தண்டவாளத்தையொட்டி தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சூர்யா குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக்கொண்டிருந்தார்.

Advertisment

உடனடியாக அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், செவ்வாய்க்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

lorry driver incident police investigation

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். உள்ளூர் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து சூர்யா பயன்படுத்தி வந்த செல்போன், துண்டு ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், தண்டவாளப் பகுதியில் உறைந்து கிடந்த ரத்த மாதிரிகளையும் தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்தனர். காவல்துறையினர் விசாரணையில் சூர்யா கொலைக்கான காரணங்கள் தெரிய வந்தன.

அண்மையில் நடந்து முடிந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, சூர்யாவின் மாமா சுப்ரமணி கோட்டகவுண்டன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தரப்பினருடன் முன்விரோதம் இருந்துள்ளது. சுப்ரமணியத்துக்கு ஆதரவாக சூர்யா வேலை செய்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.