Skip to main content

ஆர்.கே.சுரேஷுக்கு பறந்த லுக் அவுட் நோட்டீஸ்; ஆருத்ரா விவகாரத்தில் நடவடிக்கை

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Lookout notice flown to RK Suresh; Action on Arudra issue

 

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பச் செலுத்தவில்லை.

 

இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, ராஜா உள்ளிட்ட 11 பேர் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இந்த வழக்கில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் தனக்கு தெரிந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களுக்கு உதவியும் வந்ததாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் ஆஜர் ஆகவில்லை.

 

இந்நிலையில் சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டி, ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தற்போது ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்