Skip to main content

''சட்டமன்றம் திமுகவின் அறிவாலயம் ஆகிவிட்டது '' - ஜெயக்குமார் பேட்டி

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

 "Look, my hands are all scratched" - Jayakumar interviewed

 

சென்னையில் தமிழக அரசைக் கண்டித்தும், சட்டசபை மரபுகளை மீறியதாக சபாநாயகரை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்திருந்த நிலையில் தற்பொழுது அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 

தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதற்காக அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறை அவர்கள் அனைவரையும் சென்னை எழும்பூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.தற்போது எடப்பாடி தரப்பு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

 

அப்பொழுது வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் ''சட்டவிரோதமான செயலா உண்ணாவிரதம் இருப்பது? மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தார், உப்புச் சத்தியாகிரகம் செய்தார். அதேபோல் நாட்டினுடைய விடுதலைக்காக பல்வேறு அறப்போராட்டங்களை கடைபிடித்து இருக்கிறார். நாங்களும் அவரைப் போன்று அறப்போராட்டத்தை தான் கடைபிடிக்க வேண்டும் என்று நேற்று எழுதிக் கொடுத்தோம். அதற்கு அனுமதி கொடுத்துவிட்டு போயிருக்கலாமே. இன்னைக்கு காலையிலிருந்து எப்படிப்பட்ட எழுச்சி... பாத்தீங்களா. ஒன்பது மணிக்கே போலீசார் எல்லாரையும் இழுத்து வண்டியில் ஏற்றி, பாருங்க என் கையெல்லாம் ஸ்கிராச் ஆகிப்போச்சு. ஆடு மாடு மாதிரி பஸ்ல எல்லாம் ஏத்தி, பத்திரிகைகாரங்க உங்களுக்கும் அடி உதையெல்லாம் வாங்க வைத்துவிட்டார்கள். சட்டமன்றத்தைப் பொறுத்தவரை அது திமுகவின் அறிவாலயம் ஆகிவிட்டது. அங்கு ஸ்டாலின், உதயநிதி புகழ் பாடுவோருக்குத்தான் இடம். ஓட்டுப்போட்ட மக்களுக்கு வயிறு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.