தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (12.10.2021) அறிவிக்கப்பட இருக்கின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. தற்போதைய நிலவரப்படி திமுக பல இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.
வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்பு நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிடலாம் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்து சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டனர். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், கருப்படித்தட்டை காந்தி நகர் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.