Skip to main content

சேலம் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்...1754 பதவிகளுக்கு 5923 பேர் போட்டி...!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

சேலம் மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 1754 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று (டிசம்பர் 30) தேர்தல் நடக்கிறது. 5923 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

 

Local body election-Salem

 



தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. முதல்கட்டமாக டிசம்பர் 27ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (திங்கள் கிழமை) நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிகிறது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்த அளவில், மொத்தம் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஒன்றியங்கள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. முதல்கட்ட தேர்தலில், 81.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.  

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 76004 வாக்காளர்கள், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் 120378 வாக்காளர்கள், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 59530 வாக்காளர்கள், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 77089 வாக்காளர்கள், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 89108 வாக்காளர்கள், சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 69070 வாக்காளர்கள் தலைவாசல் ஒன்றியத்தில் 109942 வாக்காளர்கள் மற்றும் வாழப்பாடி ஒன்றியத்தில் 67658 வாக்காளர்கள் என மொத்தம் 668779 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மேற்சொன்ன எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 1173 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி சார்பான தேர்தலில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 119 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதை அடுத்து, மீதமுள்ள 117 பதவிகளுக்கு 505 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர். கட்சி சார்பற்ற தேர்தலில் 191 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, 186 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இவற்றுக்கு 760 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

 



அதேபோல், மேற்கண்ட எட்டு ஒன்றியங்களில் மொத்தமுள்ள 1683 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 244 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். எஞ்சியுள்ள 1439 பதவிகளுக்கு மொத்தம் 4596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆக, மேற்கண்ட எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2005 பதவிகள் உள்ளன. இவற்றுக்கு 251 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மீதமுள்ள 1754 பதவிகளுக்கு 5923 பேர் இன்றைய தேர்தல் களத்தைச் சந்திக்கின்றனர். 

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகளும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படக்கூடிய அழியாத மை முதல் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட 72 வகையான பொருள்கள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட தேர்தல் பணிகளில் 9500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தவிர, காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவில் முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை; 5 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

West Bengal Local Government Elections inceident Repolling in 5 districts

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் கடந்த சனிக்கிழமை (ஜூலை 08) ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

இருப்பினும் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச் சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச் சாவடியை சூறையாடினர். அதே பகுதியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவங்களும் நடைபெற்றது. மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சா வாக்குச் சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு வாக்குப் பெட்டிகளைக் குளத்தில் வீசினர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புருலியா, பிர்பூம், ஜல்பைகுரி, நதியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று  நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் உச்சகட்ட பரபரப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

west bengal local body election secnerio

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அசாம்பாவிங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச்சாவடியை சூறையாடினர். மேலும் வாக்குச்சாவடியில் இருந்த வாக்கு சீட்டுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து தேர்தலில் வாக்களிக்கச் சென்ற மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குச்சாவடி சூறையாடப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரங்களைத் தடுக்கும் விதமாக போலீசார் தடியடி நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கூச்பெகார் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை தூக்கிக்கொண்டு இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சாவில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இரண்டு வாக்குப்பெட்டிகளை குளத்தில் வீசினர். வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முன்னதாக முர்ஷிதாப் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.