Skip to main content

சேலத்தில் திமுகவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அமோக வெற்றி! 

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

சேலம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 22 வயது இளம்பெண் சந்தித்த முதல் தேர்தலிலேயே, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.


சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் சுக்கம்பட்டி, பூவனூர் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 3- வது வார்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மோகன் மனைவி பிரீத்தி என்பவர் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். பிரீத்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. 22 வயதே ஆன பிரீத்தி, தொலைநிலைக் கல்வித்திட்டம் மூலம் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டார். 

local body election results salem district


இந்த வார்டு, சுழற்சி முறையில் இந்தமுறை பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டதால், தேர்தலில் போட்டியிடும் கனவில் இருந்த மோகன், தனது மனைவியை போட்டியிட வைத்தார். தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட்டன. தேர்தல் முடிவு, மாலை 05.00 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இளம்பெண், பிரீத்தி 2204 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவைச் சேர்ந்த பூங்கோதை செல்வம் 1154 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். அதாவது, 1050 வாக்குகள் வித்தியாசத்தில் பிரீத்தி அமோக வெற்றி பெற்றார்.


தேர்தல் வெற்றி குறித்து பிரீத்தியிடம் கேட்டபோது, பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்து பழக்கம் இல்லை என்று ரொம்பவே கூச்சப்பட்டார். வெட்கத்தில் நெளிந்தார். கணவர் மோகன், ''இனிமேல் கவுன்சிலர் கூட்டங்களில் நீதானே பேசி ஆகணும்'' என்று சொல்லி, அவருக்கு தைரியமூட்டினார். இதையடுத்து பிரீத்தி நம்மிடம் பேசினார்.

local body election results salem district

 
''அயோத்தியாப்பட்டணம் 3- வது வார்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் நான் போட்டியிட வேண்டும் என்று கணவர் கூறினார். இதுதான் எனக்கு முதல் தேர்தல் அனுபவம். சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என் மாமனார், தீவிர திமுக தொண்டர். கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே அவர் திமுகவில் இருக்கிறார். கணவரும் தீவிர விசுவாசி. அவர்களுக்கு உள்ளூரில் உள்ள செல்வாக்கும், உதயசூரியன் சின்னமும்தான் வெற்றியை எளிதாக்கியது.


தூய்மை இந்தியா பற்றியும், இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லை என்பது போலவும் பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்ற சுக்கம்பட்டி, பூவனூர் கிராமங்களில் இன்னும் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஏராளமாக இருக்கின்றன. எங்களிடமும் பொதுமக்கள் கழிப்பறை வசதி செய்து தரும்படிதான் கேட்டனர். 


கடந்த எட்டு ஆண்டுகளாக, ஆட்சியில் இருப்பவர்கள் எங்கள் பகுதிகளில் கழிப்பறை, சாக்கடை கால்வாய் வசதிகளைக்கூட முறையாக செய்யவில்லை. என் கவனமெல்லாம் எங்கள் கிராம மக்களுக்கு பொதுக்கழிப்பறை மட்டுமின்றி, வீடுகள்தோறும் தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுப்பதில்தான் இருக்கிறது,'' என்றார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை; 5 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

West Bengal Local Government Elections inceident Repolling in 5 districts

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் கடந்த சனிக்கிழமை (ஜூலை 08) ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

இருப்பினும் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச் சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச் சாவடியை சூறையாடினர். அதே பகுதியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவங்களும் நடைபெற்றது. மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சா வாக்குச் சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு வாக்குப் பெட்டிகளைக் குளத்தில் வீசினர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புருலியா, பிர்பூம், ஜல்பைகுரி, நதியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று  நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் உச்சகட்ட பரபரப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

west bengal local body election secnerio

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அசாம்பாவிங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச்சாவடியை சூறையாடினர். மேலும் வாக்குச்சாவடியில் இருந்த வாக்கு சீட்டுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து தேர்தலில் வாக்களிக்கச் சென்ற மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குச்சாவடி சூறையாடப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரங்களைத் தடுக்கும் விதமாக போலீசார் தடியடி நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கூச்பெகார் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை தூக்கிக்கொண்டு இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சாவில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இரண்டு வாக்குப்பெட்டிகளை குளத்தில் வீசினர். வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முன்னதாக முர்ஷிதாப் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.