Skip to main content

வெற்றி அறிவிப்பில் தில்லுமுல்லு...வேதனையில் தீக்குளிக்க முயற்சித்த வேட்பாளர்...!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

வாக்கு எண்ணிக்கையானது, சில வேட்பாளர்களை நொந்து நூலாக்கி விடுகிறது. அப்படி ஒரு வேட்பாளராக இருக்கிறார் ராமமூர்த்தி. வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் குளறுபடி இருப்பதாக தீக்குளிக்க முயற்சித்தார்.  சாலை மறியலிலும் கூட ஈடுபட்டு போராடி வருகிறார். 

 

local body election result problem

 



விருதுநகர் – கூரைக்குண்டு ஊராட்சியின் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார் சரவணன். அவரோடு, சரவணன் என்பவரும், பெண் வேட்பாளர் ஒருவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நடந்தபொது, ராமமூர்த்தியும் சரவணனும் தலா 183 வாக்குகள் வீதம் பெற்றனர். இருவரிடமும் அதிகாரிகள், 'இரண்டு நாட்கள் கழித்து விருதுநகர் ஊராட்சி அலுவலகத்துக்கு வாருங்கள். குலுக்கல் முறையில் வேட்பாளரை தேர்வு செய்வோம்' எனச் சொல்லி அனுப்பினர்.

என்ன நடந்ததோ தெரியவில்லை. குலுக்கலே நடத்தாமல், சரவணனுக்கு வெற்றிச் சான்றிதழ் கொடுத்துவிட்டனர். அவரும் கூரைக்குண்டு ஊராட்சி ஆவணத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். ராமமூர்த்திக்கு இத்தகவல் சென்றதும் துடித்துப்போனார். அவர் தரப்பினர், 'குலுக்கலே நடத்தாமல் எப்படி ஒருதலைப்பட்சமாக வெற்றி என்று அறிவிக்கலாம்?' என்று கேள்வி கேட்டு முற்றுகையிட்டனர். அவர்களிடம், 'தேர்தல் அலுவலர் இன்று விடுமுறையில் இருக்கிறார். அதனால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரைப் பாருங்கள்' என்று அதிகாரிகள் தெரிவிக்க, ஆவேசமான ராமமூர்த்தி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

அதனைத் தடுத்த காவல்துறையினருக்கும், ராமமூர்த்தியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட, காவலர்கள் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு, வாக்கு எண்ணிக்கை குறித்த புகாரை ராமமூர்த்தி கொடுத்தார். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தனர். ஆனாலும், தனது புகாரைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தில், ராமமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் சாலை மறியலிலில் ஈடுபட்டனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .