2020 ஜனவரி 2ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்க்கான வாக்கு நிலவரம் உடனடியாக தெரிந்துவிடும். அடுத்தபடியாக ஒன்றிய குழு உறுப்பினர்களின் வெற்றி விபரம் தெரியவரும். இறுதியாகவே மாவட்ட கவுன்சிலர் யார் என்பது தெரியவரும். இதனால் நள்ளிரவை கடந்தும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
கலசப்பாக்கம் ஒன்றியம் மற்றும் போளூர் ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை மிக மிக மெதுவாக நடைபெறுகிறது. ஏற்கனவே அரசு ஊழியர்கள் செலுத்திய வாக்குகள் 90 சதவிதம் செல்லாதவை என அறிவித்து வருகிறார்கள் அதிகாரிகள்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தாமதமாவதை கண்டு அதிருப்தியடைந்துள்ள வேட்பாளர்களும், அவர்களது முகவர்களும் ஆளும் கட்சி, அதிகாரிகள் துணையுடன் எதிர்கட்சிகள் பெரும் வெற்றியை தடுக்க முயல்கிறது என சந்தேகப்படுகின்றனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பும், வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.