Skip to main content

அதிக இடங்களில் வென்றும் பிரயோஜனம் இல்லை...கரூர் அதிமுக கவலை...!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

தமிழகத்தின் மேற்கு பகுதி மாவட்டங்களில் அதிமுக தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் அவர்கள் தலைமையில் யூனியன் சேர்மன் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளை பெறமுடியாமல் சில இடங்களில் நடந்து வருகிறது. குறிப்பாக யூனியன் சேர்மன் பதவியில் ஒரு இடத்தில் அதிமுக அதிகமாக வெற்றி பெற்றும் அந்த அதிமுகவே திமுகவிற்கு தலைவர் பதவியை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விசித்திரத்தை பார்ப்போம்.

 

local-body-election-karur-admk

 



கரூர் மாவட்டத்தில் கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை, தோகைமலை ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுக வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆம், இந்த எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுகவினரை சேர்ந்தவர்களையே தேர்ந்தெடுக்க முடியும்.

ஆனால், ஒரே ஒரு யூனியன் சேர்மேனான கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் அந்த நிலை இல்லை. காரணம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரே ஒன்றியக்குழு தலைவர் ஆக முடியும். இதில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஒன்றிய வார்டுகள் உள்ளன. சரிபாதி 10 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதிலும் மூன்று இடங்கள் பட்டியல் பிரிவு பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தான் பிரச்சனையே இந்த மூன்று இடங்களிலும் திமுகவினரே வெற்றி பெற்றுள்ளனர். பெண் பட்டியல் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் 2, 7 மற்றும் 11 ஆகும். இதில் கவனிக்கப்பட வேண்டியது இந்த மூன்று ஒன்றிய வார்டுகளிலும் திமுக பெண் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இது தவிர ஒன்றாவது வார்டு மற்றும் மூன்றாவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண் வேட்பாளர்களும் திமுகவை சார்ந்தவர்கள் ஆவார்கள்.

இதனால், அதிமுக கூட்டணியில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட பட்டியல் பிரிவு பெண் வேட்பாளர் யாரும் வெற்றி பெறாததால் தி.மு.க. கவுன்சிலரே தலைவர் பதவியை பிடிக்க முடியும். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.